சுதந்திரத்திற்கு முந்தைய தேர்தல்முறை

தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் பரிணாம வளர்ச்சி குறித்த ஒரு வரலாற்றுச் சுருக்கம்

தற்போதைய கிராம ஊராட்சிகளுக்கு முன்னோடிகளாக தமிழ்நாட்டில் விளங்கிய கிராம மன்றங்கள், பண்டைய காலத்தில் தோன்றியவை என்பதோடு உள்ளாட்சி அமைப்பிலான உயரிய வகையிலான தன்னாட்சி நிலையுடன் வரிவிதிப்பு உட்பட்ட அதிகாரங்களைக் கொண்டு சிறிய குடியரசுகளைப் போல் இயங்கி வந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள வைகுந்த பெருமாள் கோவில் சுவர்களில் காணப்படும் கல்வெட்டு சாசனம் இதற்கு தகுந்த சான்றாக விளங்குகிறது. கிராமங்கள் எவ்வாறு வார்டுகளாக (மண்டலங்கள்) பிரிக்கப்பட்டு "சபை" என்ற அமைப்புகள் மூலம் கிராம நிர்வாகம் செயல்பட்டது என்பதை இக்கல்வெட்டு சாசனம் விளக்குகிறது. ஒவ்வொரு வார்டுக்குமான பிரதிநிதிகள் குடத்தில் ஓலையிட்டு எடுக்கும் முறையில் (குடவோலை முறை) எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதையும் இது விளக்குகிறது. இந்தியாவில் ஆங்கிலேயரின் வருகை வரை கிராமங்களின் அன்றாட பணிகளிலிருந்து மைய அதிகாரம் வெகுதொலைவில் இருந்தது. ஆங்கிலேய ஆட்சி கிராமங்களில் அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிற்சாலைகளில், நெய்யப்பட்ட துணிகள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் அறிமுகத்தால் கிராமத் தொழில்கள் நலிவடைந்தன.

கிராம கைவினைத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும், தங்களது வேலை வாய்ப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் எண்ணிக்கையில் வளர்ந்து வந்த நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனைத் தொடர்ந்து கிராம பொருளாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. நிர்வாகமும் ஆங்கிலேயர் ஆட்சியில் அதிக அளவில் மையப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் நீதிபரிபாலனம் குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றங்களின் வசமானது; கிராமங்களில் அமைதி ஏற்படுத்தும் பணிகளை காவல்துறை எடுத்துக் கொண்டது; நில வருவாய் நிர்வாகம் அரசின் தனி துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கிராமவாசிகள் தங்களது பணிகளை தாமே நிர்வகித்துக் கொண்ட சுய சார்பு நிலையானது படிப்படியாக மறைந்ததோடு பயனுள்ள ஊரக அமைப்புகளாக விளங்கிய 'கிராமப் பஞ்சாயத்துகள்' முக்கியத்துவத்தை இழந்து தாழ்ந்தன. மக்கள் சாதாரண உள்ளூர் பணிகளுக்குக் கூட மைய அதிகார அமைப்பை எதிர்நோக்கும் சூழல் உருவானது.

நாளடைவில், கூடுதலான மையப்படுத்துதல் பயனற்றது என்பது ஆங்கிலேய நிர்வாகத்தாலும் அறியப்பட்டது. முறையற்ற அரசு அமைப்பில் உள்ள குறைபாடுகளைக் களைய 'கிராம பஞ்சாயத்துகளே' தலை சிறந்த தீர்வாக அமையும் என அவர்கள் உணர்ந்தனர். பொது நோக்கங்களை செயல்படுத்துவதில் மக்கள் தாமே முன்வந்து தரும் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதையும் உணர்ந்தனர். இந்நோக்கில் புதிய முயற்சிகளை உருவாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்திய பெருமை ரிப்பன் பிரபுவையே சாரும். உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் அலுவல்சாரா அமைப்பினரும் பங்கேற்கும் வகையில் 1882-ஆம் ஆண்டு இவர் இயற்றிய தீர்மானம், மெட்ராஸ் லோக்கல் போர்டு சட்டம் - 1884 இயற்ற வழிவகுத்தது.

இச்சட்டம், சிறிய நகரங்களிலும், பெரிய கிராமங்களிலும் குறிப்பாக சுகாதார மற்றும் மின்வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு 'ஒன்றியங்கள்' உருவாக்க வகைசெய்தது. அதிகாரப் பரவலுக்கான அரசு மட்டக்குழுவின் வருகைக்குப் பிறகு ஒவ்வொரு ஒன்றியத்திற்குமான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வொன்றியங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், தேர்தல் நெறிமுறைகளை அறிமுகப்படுத்தவும் 'மதராஸ் அரசு' முடிவு செய்தது. உள்ளூர் தலைவர்களை அலுவல்ரீதியான தலைவர்களாகக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற பஞ்சாயத்துகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் அமைக்கவும் முடிவு செய்தனர். சுமார் 1000 அதிகாரப்பூர்வமற்ற பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டாலும் சட்டப்பூர்வ அடிப்படையில்லாததால் அவற்றின் நிலை வலுவிழந்தும் திருப்தியின்றியும் இருந்தது. மேலும், அவை மாவட்ட மற்றும் வட்ட போர்டுகளுடன் எவ்வித தொடர்புமின்றி இருந்தன. அதிகார பகிர்ந்தளிப்பிற்கான அரசுமட்டக்குழு சட்டப்பூர்வமான நிலையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதால் அதற்கேற்ப 1920-ஆம் ஆண்டு 'மதராஸ் கிராம பஞ்சாயத்துக்கள் சட்டம்' ஏற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம், 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை அளித்ததோடு பஞ்சாயத்துகளின் அனைத்து உறுப்பினர் தேர்தலுக்கும் வழிவகுத்தது.

1930-ஆம் ஆண்டுவாக்கில் பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, மெட்ராஸ் லோக்கல் போர்டு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'ஒன்றியங்களுக்கு' நிகரான நிலையில் பஞ்சாயத்துகள் வைக்கப்பட்டதோடு கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்பட்டன. பின்னாளில் இவற்றை மேற்பார்வையிடுதல் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் லோக்கல் போர்டு சட்டத்தின்படி ஆய்வாளர் மற்றும் நகராட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டது.

*****